தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேர்வு நடத்தினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, பெற்றோர் அல்லது குழந்தைகளுக்கு தேர்வு எதுவும் நடத்த கூடாது. விதியை மீறும் பள்ளிகளுக்கு முதல் முறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தவறு நடந்தால் ஒவ்வொரு முறையும் ரூ.50 ஆயிரம் அபராதம்.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தினால் பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளை கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 6 மாதம் வரை பள்ளிகளில் சேர்க்கலாம். நீட்டிக்கப்பட்ட கால அளவுக்கு பிறகு சேர்க்கப்படும் குழந்தைக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும். வயது சான்றை நிரூபிக்கும் ஆதாரம் இல்லை என்பதற்காக பள்ளிகளில் குழந்தையை சேர்க்க மறுக்க கூடாது. தனியார் பள்ளிகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் வசிக்கும் நலிவுற்ற, மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீட்டை முதல் வகுப்பிலோ, எல்.கே.ஜி.யிலோ, மழலையர் கல்வி வகுப்பிலோ அளிக்க வேண்டும். இந்த குழந்தைகளுக்கான கட்டணத்தை அரசே பள்ளிகளுக்கு செலுத்தும். இந்த தொகைக்கான கட்டணத்தை உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சிபிஎஸ்இ மண்டல அலுவலர், ஐசிஎஸ்இ நிர்வாகம் ஆகியோரிடம் கோரிக்கை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.