
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் தாக்கல் செய்த அறிக்கையால், எதிர்க்ட்சிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு மத்திய அரசு ஆளானதோடு, அந்த ஊழல் வழக்கின் விசாரணையையும் வேகம் பிடிக்கவைத்தது.
அத்துடன் முன்னாள் தொலை தொடர்புதுறை அமைச்சர் ஆ.ராசாவும் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த ஊழலையே முழுங்கி ஏப்பம்விடும் மற்றொரு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் அம்பலமாகியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ ஏலம் இல்லாமலேயே செய்த எஸ்-பேண்ட் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டினால் 2லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.
அதாவது இஸ்ரோ அனுப்பும் செயற்கை கோள்களில் இருந்து பெறப்படும் அலைவரிசைகள் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.
இந்த அலைக்கற்றைகளை வர்த்தக ரீதியில் ஒதுக்கீடு செய்யும் பணிகளை மேற்கொள்ள இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட நிறுவனம் 'ஆண்ட்ரிக்ஸ்'.
இந்நிறுவனம், கடந்த 2005 ஆம் ஆண்டு, 'தேவாஸ் மல்டி மீடியா' என்ற தனியார் நிறுவனதிற்கு 70 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை விற்க ஒப்பந்தம் செய்துகொண்டது.
20 ஆண்டுகள் வரை இந்த அலைவரிசையை பயன்படுத்திக் கொள்ள ரூ.1000 கோடி மட்டுமே 'தேவாஸ் மல்டி மீடியா'நிறுவனத்திடமிருந்து கட்டணமாக பெற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான ஒப்பந்தத்திலும் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். தொலைபேசி நிறுவனங்களுக்கு 20 மெகா ஹெட்ஸ் அலைவரிசைகளை ஒதுக்கிய இஸ்ரோ, அதற்கு கட்டணமாக ரூ.12 ஆயிரத்து 847 கோடி பெற்றுள்ளது.
அதாவது தனியாருக்கு விற்ற தொகையைவிட பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதே சமயம் தனியார் நிறுவனமான 'தேவாஸ் மல்டி மீடியா'வுக்கு மிக மிக குறைந்த தொகையில் அலைவரிசைகளை ஒதுக்கியுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது பொது கணக்கு தணிக்கை துறை ஆய்வில் தெரியவந்துள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.